
கோலாலாம்பூர், ஏப்ரல்-29-குற்றச் செயல்களுக்கு எதிராக இளைஞர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக, ம.இ.காவின் கல்விக் கரமான MIED மற்றும் கோலாலம்பூர் போலீஸ் இணைந்து ‘குற்றச்செயல்களுக்கு எதிரான தலைமுறை’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளன.
Jalan Semarakகில் உள்ள , PULAPOL போலீஸ் பயிற்சி மையத்தின் Tan Sri Abdul Rahman மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வில், ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், கோலாலாம்பூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ மொஹமட் அசானி ஓமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் 500 மாணவர்கள் இதில் பங்குபெற்றனர்.
தொடக்க விழாவுக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய MIED தலைவருமான டான் ஸ்ரீ விக்னேஸ்வரன், சமூகச் சீர்கேடுகளைத் தடுக்கக் கல்வியே மிகச்சிறந்த ஆயுதம் என்று குறிப்பிட்டார்.
அவருடன் கலந்துகொண்ட கோலாலம்பூர் துணை போலீஸ் படைத் தலைவர் டத்தோ முகமட் அஸானி ஒமார், தலைநகரில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார்.
இவ்வேளையில், வணக்கம் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில், திட்ட இயக்குனர் ஆண்ட்ரூ டேவிட், இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் போதைப்பொருள் ஒழிப்பு கண்காட்சிகள் மற்றும் குற்றத் தடுப்பு பயிற்சிப் பட்டறைகள் குறித்து விவரித்தார்.
நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் சிலரும், தங்களுக்குள்ளேயே ‘குற்றத் தடுப்பு தூதுவர்களாக’ செயல்பட இது ஊக்கமளிக்கும் என ஆர்வத்துடன் கூறினர்.
வருங்காலத் தலைமுறையினரின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் ஒரு முன்மாதிரித் திட்டமாக இது அமைகிறது.



