
சிவப்பு சமிக்ஞை விளக்கின் போது மீறி சென்ற குடிநுழைவுத்துறை லாரி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 12 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
அதிகாலை 1 மணியளவில் குடிநுழைவு துறை லாரி சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறி சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பச்சை சமிக்ஞை விளக்கின் போது சென்ற புரோட்டான் சாகா கார் மீது அந்த லாரி மோதியுள்ளது.
மோதலின் வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் நின்றிருந்த நான்கு பாதசாரிகள் மீது மோதியது. அவர்களில் 53 வயது தந்தையும், 25 மற்றும் 12 வயதுடைய அவரது இரு மகள்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களின் 55 வயது தாய் படுகாயமடைந்து கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லாரி ஓட்டுநர் உட்பட மூன்று வாகன ஓட்டுநர்களும் காயமின்றி தப்பினர். குடிநுழைவு துறை லாரி ஓட்டுநரும் புரோட்டான் சாகா ஓட்டுநரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரிடமும் நடத்தப்பட்ட மதுபோதை பரிசோதனை மற்றும் ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு இல்லை என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



