
சிரம்பான் – ஜூன் 13 – கராத்தே தற்காப்பு கலைப் போட்டியில் தொடர்ச்சியாக நெகிரி செம்பிலான் மாநிலம் மற்றும் இரு முறை தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி மாணவன் வசந்த் அபிநந்தன் வசந்தகுமரனுக்கு விளையாட்டுத்துறைக்கான சாதனை விருதை நெகிரி செம்பிலான் அரசாங்கம் வழங்கி கௌரவித்தது.
இந்த விருதை நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் சார்பில் விளையாட்டுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ முஸ்தபா நாகூர் 8 வயதுடைய வசந்த் அபிநந்தனுக்கு வழங்கி சிறப்பித்தார்.
மூன்று வயது முதல் தற்காப்பு கலையை பயின்றுவரும் வசந்த் அபிநந்தன் தொடந்து மாநிலத்திற்கும் நாட்டிற்கும் சாதனை படைக்க வேண்டும் என்றும் முஸ்தபா நாகூர் வாழ்த்தினார். இரண்டாம் வகுப்பு படித்துவரும் இந்த மாணவன் பள்ளியின் இதர புறப்பாட நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்குகொண்டு பல்வேறு விருதுகளை வென்றுள்ளான் . இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் புத்தாக்க போட்டியில் கலந்துகொண்டு கரப்பான் பூச்சிகளை விரட்டக்கூடிய ஸ்பெரே கண்டுப்பிடிப்புக்காக ஹரிச்சந்திரன் விஸ்னு, ஜோஸ்லிம் ஜேம்ஸ், லெலி லுர்தஸ் அமரன், மித்ரா லோகநாதன் ஆகிய சக மாணவர்களுடன் இணைந்து வசந்த் அபிநந்தனும் தங்கப் பதக்கம் வென்றான் என்பது குறிப்பிடத்தக்கது. வார இறுதியில் நடைபெறும் இரண்டு கராத்தே போட்டிகளில் கலந்துகொள்ளும் வசந்த் அபிநந்தனுக்கு நெகிரி மாநில அரசாங்கம் வழங்கிய சாதனை விருந்து மேலும் ஊக்குவிப்பாக அமையும் என அந்த மாணவனின் தந்தை வசந்தகுமரன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.