
கோலாலம்பூர், ஜூலை-7-நாட்டில் 16.91 விழுக்காட்டு தொழிலாளர்கள் பணி தொடர்பான உளவியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சு தெரிவித்திருக்கிறது.
தேசிய தொழில் நோய்த் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2023 தொடங்கி கடந்தாண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் Datuk Seri R. Ramanan கூறினார்.
பணியிடத்தில் உள்ள உளவியல் அபாயங்களைக் மதிப்பிடுவதற்காக, ஏழு தொழில்துறைகளில் உள்ள 100,000 தொழிலாளர்கள் அந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர்.
அதிகமான பணிச் சுமை, அதிவேகப் பணிகள் மற்றும் நேர அடிப்படையிலான அழுத்தம் ஆகியவை அந்த அபாயங்களில் அடங்கும். அவை மிகவும் தீவிரமான பணிச் சூழல்களில் பொதுவாகக் காணப்படும் முக்கியக் கூறுகளில் சில என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த ஆய்வின் முடிவுகள், தொழிலாளர்களின் மனநல நிலை குறித்த அனுபவப்பூர்வமான தரவுகளை வழங்கியுள்ளன. அதன் வழி மேலும் பயனுள்ள தடுப்பு வியூகங்களையும் அணுகுமுறைகளையும் கண்டறிய முடியும் என நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ரமணன் கூறினார்.
இலக்கவியல் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான பயன்பாடு, அதீத வெளிப்பாடு அல்லது அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிரமம் ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தம் ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



