
கோலாலம்பூர், மே-13- தேசிய முன்னணி தொடர்ந்து புறக்கணித்து வருவது குறித்து ம.இ.கா தனது ஏமாற்றத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்கள் தொடர்பான பல்வேறு முக்கிய விவகாரங்களில் மலேசிய இந்திய காங்கிரஸ் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை தெளிவாகக் காட்டும் வகையில், தேசிய முன்னணியின் செயல்பாடு இருந்து வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, செனட்டர்களை நியமிக்கும் செயல்முறை நடைபெற்று வருகிறது, ஆனால் அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும்,ம.இ.கா சமர்ப்பித்த பரிந்துரைகளைக் கருத்தில் கொள்ளாமல், தேசிய முன்னணி ஒதுக்கீட்டின் கீழ் நியமனங்களையே செய்துள்ளனர்.
ம.இ.கா சமர்ப்பித்து, தேசிய முன்னணி தலைவர் மூலம் அனுப்பப்பட்ட பெயர்ப் பட்டியல் எந்தவொரு உறுதியான பலனையும் அளிக்கவில்லை என ம.இ.காவின் மத்திய செயலவை உறுப்பினரும் ஊடகப் பிரிவின் தலைவருமான எல் . சிவசுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதோடு ஜி.எல்.சி எனப்படும் அரசு சார்ந்த நிறுவனங்களில் நியமனங்களுக்காகவும் பலமுறை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தும் எந்தவொரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை இன்றுவரை, ஒரு நியமனம் கூட ம.இ.கா மூலம் இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அர்ப்பணிப்பை உண்மையாகப் பிரதிபலிக்கவில்லை.
ஒரு முதிர்ச்சியான அரசியல் கூட்டணி, ஒவ்வொரு உறுப்புக் கட்சியின் பங்கையும் மதிக்க வேண்டும், விசுவாசத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் மற்றும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இது தொடர்பாக, தேசிய முன்னணி தலைமைத்துவம் ம.இ.காவுடனான தனது அணுகுமுறையை முழு நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்கூட பலமுறை, உதவுவதற்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாகக் கூறியுள்ளார் அப்படியிருந்தும் ஆக்கப்பூர்வமான நன்மை மற்றும் அனுகூலங்களை ம.இ.கா பெறவில்லை என்பதையும் சிவசுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.



