
புத்ராஜெயா, செப்டம்பர் 18 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நஜீப்பை தொடர்புபடுத்தியுள்ள வழக்குகள் உட்பட அனைத்து ஊழல் வழக்குகளும் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென அவர் கூறினார். எந்தவொரு தலைவரோ அல்லது பொதுமக்களோ தனிப்பட்ட செல்வத்தை பெருக்குவதற்காக ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை அரசாங்கம் ஒருபோதும் அலட்சியப்படுத்தாது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
மன்னிப்பு வழங்கும் விவகாரத்தில் பிரதமராக தமது பங்கு, சட்டரீதியான விளைவுகள், நாட்டின் நிலைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான அம்சங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதாகமென அவர் விளக்கினார். எனினும், அரசியலமைப்பின்படி மன்னிப்பு வழங்கும் இறுதி அதிகாரம் மாமன்னருக்கே இருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.
இதனிடையே, சட்ட விவகாரப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய நிபந்தனை மன்னிப்பின் அடிப்படையில் நஜீப், 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க வேண்டும். மேலும், 50 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறினால் மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு எஞ்சிய தண்டனையை சிறையில் தொடர வேண்டியிருக்கும்.



