
கோலாலம்பூர், ஏப்ரல்-23-சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங், கோலாலம்பூரில் நடைபெறவுள்ள Rain Rave நீர் இசைத் திருவிழா மற்றும் தொழிலாளர் தின கொண்டாட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஏப்ரல் 30 முதல் மே 2 வரை புக்கிட் பிந்தாங்கில் நடைபெறவுள்ள இந்த வருடாந்திர நிகழ்வில், பங்கேற்பாளர்கள் நீச்சல் உடை உட்பட அரைகுறை ஆடைகளை அணிய வேண்டும் என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றார் அவர்.
கோலாலம்பூரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சிறு வணிகர்களுக்கு உதவவும் ‘Visit Malaysia 2026’ சுற்றுலா பிரச்சாரத் திட்டத்தின் கீழ் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்வது அவரவர் விருப்பம் என்றும், எவரும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் கூறிய அமைச்சர், ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பி இனவாத அல்லது அரசியல் ரீதியாக இந்தத் திருவிழாவைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
முறையாகத் திட்டமிடப்பட்டுள்ள இவ்விழா, நாட்டின் கலாச்சாரப் பண்புகளுக்கு உட்பட்டே நடைபெறும் என அவர் உறுதியளித்துள்ளார்.
தாய்லாந்தின் சொங்ரான் நீர் விழாவை ஒத்திருக்கும் இவ்விழா மலேசியச் சூழலுக்குத் தேவையில்லை என்றும், அது நடைபெறும் இடம், பிரமாண்டம் போன்றவற்றை ஏற்பாட்டாளர்கள் மறுஆய்வு செய்ய வேண்டுமென்றும், ஜனவரியில் சிலாங்கூர் பாஸ் இளைஞர் தலைவர் ஒருவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



