
கோத்தா கினபாலு, மார்ச்-19-பரபரப்பான நெடுஞ்சாலையில் சிறுவன் ஒருவன் ஸ்கூட்டரில் சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது குறித்த பலர் தங்களது கவலையை வெளியிட்டனர்.
இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட அந்தச் சிறிய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவில், கார் ஓட்டுனர்களும் , மோட்டார் சைக்கிள் ஓட்டிகளும் அச்சிறுவனைத் தவிர்ப்பதற்காக வேகத்தைக் குறைத்தபோதும், அவன் சாலையில் சீராக ஸ்கூட்டரை ஓட்டிச் செல்வது அந்த காணொளியில் காணமுடிந்தது.
பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், புட்பாண்டா (Foodpanda ) ஊழியர் ஒருவர், அந்தச் சிறுவனைச் சாலையின் ஓரமாக அழைத்துச் சென்று, பாதுகாப்பாக நிறுத்தினார்.
கோத்தா கினபாலுவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது, இருப்பினும் சரியான இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தக் காணொளி இணையத்தில் வைரலானதால் பலர் குறிப்பாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். பலர் புட்பாண்டா ஊழியர் விவேகமாகச் செயல்பட்டதைப் பாராட்டினர்.
பல வாகன ஓட்டிகள் அவனிடமிருந்து விலகி நிற்பதும், மற்றவர்கள் அந்தச் சிறுவன் எப்படி யாருக்கும் தெரியாமல் நெடுஞ்சாலைக்குள் நுழைந்தான் என்பது குறித்தும் சிலர் தங்களது கவலையை வெளியிட்டனர்.
பிள்ளைகள் விவகாரத்தில் அதிக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு தேவை என்றும் பல நெட்டிசன்கள் வலியுறுத்தினார்.



