
பாச்சொக், அக்டோபர் 24 –
நேற்று மாலை பாச்சோக்கில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் ஓட்டிய Toyota Avanza வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள வீட்டையும் மூன்று வாகனங்களையும் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுக்கும், மூவர் லேசான காயங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீட்டினுள் வீட்டின் உரிமையாளர் உட்பட மற்ற இருவர் உரையாடி கொண்டிருக்கும்போது, 21 வயதான அந்த வாகன ஓட்டுநர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேராக வீட்டினுள் சென்று மோதியுள்ளார்.
மேலும் ரு பெரோடுவா மைவி (Perodua Myvi) கார் மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்களையும் மோதி சேதப்படுத்தியுள்ளார்.
தனது முன் சென்ற கார் திடீரென இடப்பக்கம் திரும்பியதால், அதைத் தவிர்க்க முயன்றபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டை மற்றும் மற்ற வாகனங்களை மோதியதென்று வாகன ஓட்டுநர் போலீசிடம் விளக்கமளித்தார்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் அருகாமையிலுள்ள பாச்சொக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான தகவலைப் பெற்றதும் எட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணி வேளைகளில் ஈடுபட்டனர் என்று பாச்சொக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (BBP Bachok) செயல்பாட்டு தலைவர் இப்ராஹிம் மொஹமட் ரோஹ்னி ( Ibrahim Mohd Rohni ) கூறினார்.



