
உலு சிலாங்கூர், மே-28-உலு சிலாங்கூர் அருகேயுள்ள பாத்தாங் காலியில் உள்ள தனது வீட்டின் முற்றத்தில், hand brake போட மறந்ததால் பின்நோக்கி நகர்ந்த சொந்த காரே ஏறியதில் 67 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை 5.18 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக மாவட்ட போலீஸ் கூறியது.
பாதிக்கப்பட்ட முதியவர் தனது காரை வீட்டின் வாகனக் கூடத்தில் நிறுத்திவிட்டு, வீட்டின் முன் பக்க நுழைவாயில் கதவை மூடுவதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது, காரின் hand brake இழுக்கப்படாததாலும், அந்தப் பாதை வேலிக் கதவை நோக்கிச் சரிவாக இருந்ததாலும், கார் திடீரென பின்நோக்கி உருண்டு வந்து அவர் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், காரின் அடியில் சிக்கிக்கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புக்கிட் செந்தோசா தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், காரின் அடியில் சிக்கியிருந்த முதியவரை மீட்டனர்.
எனினும், தலையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அவரது உடல் சவப் பரிசோதனைக்காக குவாலா குபு பாரு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.



