
கோத்தா கினாபாலு, ஜூன்-15-நாட்டிலுள்ள நூலகங்கள் தங்களின் பாரம்பரிய கட்டட அமைப்புகளில் இருந்து வெளிவந்து, பொது மக்களை நேரடியாகச் சென்றடையும் வகையில் மேலும் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
21-ஆம் நூற்றாண்டின் நூலகங்கள் வெறும் புத்தகங்களைச் சேமிக்கும் இடமாக மட்டும் இருக்கக் கூடாது; மாறாக அவை பொது இடங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களிலும் பரவலாகக் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் வலியுறுத்தினார்.
சபா, கோத்தா கினபாலு, லிக்காஸ் அரங்கில் நடைபெற்ற ‘Kembara Ilmu’ மற்றும் சபா புத்தகக் கண்காட்சி 2026-ன் நிறைவு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமை வாரக் கொண்டாட்டத்தை ஒட்டி, மலேசியத் தேசிய நூலகம், சபா மாநில நூலகம் மற்றும் துன் ஃபுவாட் ஸ்டீஃபன்ஸ் தாவரவியல் பூங்கா ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அறிமுகம் செய்யப்பட்ட ‘Kembara Ilmu’ திட்டம், குழுப்பணியை ஊக்குவிக்கும் தகவல் தேடல் அணுகுமுறையைக் கொண்டிருந்தது.
அதேவேளை, சபா புத்தகக் கண்காட்சி உள்ளூர் படைப்புகளையும் சபாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் முன்னிலைப்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தது.



