
பாலிங், மே-11– பிறரின் அடையாளத் தகவல்களைப் பயன்படுத்தி BUDI95 எரிபொருள் மானிய மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வங்கதேசத்தைச் சேர்ந்த பெட்ரோல் நிலைய பணியாளர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
34 வயதுடைய அந்த நபர், பாலிங்கின் கூப்பாங் (Kupang) பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரைச் சேர்ந்த 57 வயது வியாபாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரது அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி கடந்த மார்ச் 18 முதல் ஏப்ரல் 8 வரை ஆறு முறை RON95 எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடியில் மொத்தம் 309.03 லிட்டர் எரிபொருள் பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் சுமார் 1,242 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய உள்ளூர்வாசி ஒருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.



