
ஜம்மு, செப்டம்பர்-20,இந்தியாவின் ஜம்மு பகுதியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
அவ்விளைஞர் படுகாயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
நீரஜ் என்பவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேக் வெட்டும் தருணத்தில், அவரின் முகத்தில் நண்பர் கேக்கை பூசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.
அங்கிருந்த நண்பர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற போதும், ஆத்திரமடைந்த நீரஜ், மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து நண்பரின் கழுத்துப் பகுதியில் தாக்கினார்.
இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவுச் செய்துள்ள போலீஸார், நீரஜ் மற்றும் அவரது சகோதரரை கைதுச் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



