’பிஸ்மில்லாஹ்’ என முணுமுணுத்தாரா ரொனால்டோ? உலகக் கிண்ண போட்டியில் வைரலாகும் வீடியோவால் சூடான விவாதம்

மெக்சிகோ, ஜூலை-4 – உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் கடைசி 32 அணிகள் மோதும் சுற்றில், போர்ச்சுகல் அணி குரோஷியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்ற ஆட்டத்தில், கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த ஒரு செயல் தற்போது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி பெரும் பேசும் பொருளாகியுள்ளது.
போர்ச்சுகலுக்குக் கிடைத்த பெனால்டியை கோலாக்குவதற்கு சில நொடிகளுக்கு முன்னால், ரொனால்டோ தனக்குத்தானே ஏதோ முணுமுணுப்பதைப் போட்டியில் இருந்த கேமராக்கள் படம் பிடித்தன.
அப்போது அவர் அரபு மொழியில் ‘பிஸ்மில்லாஹ்’ (Bismillah) எனக் கூறியதாக இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
சவூதி அரேபியாவின் அல்-நசர் கிளப் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வருவதால், அதன் தாக்கமாக அவர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர்.
வேறு சிலரோ, ரொனால்டோ ‘கடவுளே என்னை ஆசிர்வதியுங்கள்’ என்பதைக் குறிக்கும் ‘Bless me Lord’ எனக் கூறியிருக்கலாம் என்கின்றனர்.
அதேசமயம், கவனத்தையும் மனதையும் ஒருநிலைப்படுத்தும் முயற்சியில் ரொனால்டோ வேறு ஏதோ ஒன்றைக் கூறியிருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
இதுவரை ரொனால்டோவோ அல்லது அவரது தரப்பினரோ இது குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.
எனவே, ரொனால்டோ வாயைத் திறந்தால் மட்டுமே உண்மை என்ன என்பது வெளிச்சத்துக்கு வரும்…



