![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-30-Jun-2024-11-05-AM-918.jpg)
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் மீது மலேசிய இந்திய சமூகம் புதிய நம்பிக்கையை கொண்டுள்ளதாக தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். பேங்க் ரக்யாட்டின் இந்திய தொழில்முனைவர் கடனுதவி திட்டமான BRIEF – i மூலம் இந்திய சமூகத்திற்கு 50 மில்லியன் ஒதுக்கியது உட்பட பல்வேறு திட்டங்களை அரசாங்கம் ஏற்படுத்தியிருப்பதே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த அனைத்து அறிவிப்புகளும் குறுகிய காலத்தில் செய்யப்பட்டதோடு இந்திய சமூகத்தினருக்கு அரசாங்க உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்த புதிய சிந்தனைகள் மற்றும் ஊக்குவிப்புகளை ஏற்பாடு செய்து வருகிறோம் என ரமணன் கூறினார். இதற்கு சில காலம் பிடிக்கும். ஆனால் நம்மை நாமே மகிழ்ச்சியடைவதற்காக இத்தகைய அறிவிப்புகள் இல்லையென்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக அவர் கூறினார்.
நிபோங் தெபாலில் மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் Program Sembang santai நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். எனவே நாட்டை நிர்வகிப்பதற்கும் இந்திய சமூகத்தின் நன்மைக்கான முயற்சிகள் மற்றும் அதிகமான திட்டங்களை உருவாக்குவதற்காக ஒற்றுமை அரசாங்கத்திற்கு கூடுதல் அவகாசத்தை இந்திய சமூகத்தினர் வழங்குவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே சுங்கை பாக்காப் இடைத்தேர்தலுக்கான ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் இயந்திரத்தை கீழறுப்பு செய்யும் நடவடிக்கை குறித்து வினவப்பட்டபோது இதுபோன்ற செயல்கள் குறிப்பாக இளைய சமூதாயத்திற்கு நல்லதொரு முன்னுதாரணமாக இல்லையென்றும் ரமணன் மறுமொழி தெரிவித்தார்.