
கோலாலம்பூர், ஆகஸ்ட்.07- பெர்சாத்து கட்சி தானாகவே பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக பாஸ் கட்சித் தலைவர் Abdul Hadi Awang தெரிவித்திருக்கிறார். புதிய அரசியல் கூட்டணியை அமைக்கும் திட்டங்களை அக்கட்சி அறிவித்ததைச் சுட்டிக் காட்டி அவர் அவ்வாறு கூறினார்.
PN அரசியலமைப்பின்படி, வேறு எந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும் அல்லது புதிய கூட்டணியை அமைத்தாலும், அது தானாகவே தனது உறுப்பினர் தகுதியை இழந்து விடும்.
பெர்சாத்து மற்றொரு ‘அணியை’ அமைக்க விரும்புவதாக ஏற்கனவே கூறி விட்டது. அதை அதுவே அறிவித்தும் விட்டது. எனவே அக்கட்சி PNனில் இருந்து இயல்பாக வெளியேறி விட்டதாகவே அர்த்தப்படும் என ஹாடி விளக்கினார்.
பெர்சாத்து இனி கூட்டணியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கையை PN வெளியிடுமா என வினவப்பட்டதற்கு, அது தேவையற்றது என ஹாடி கூறினார். பாஸ் கட்சி கடந்த மாதம் பெர்சாத்துவுடனான தனது அரசியல் ஒத்துழைப்பை முடித்துக் கொண்டது. உறவுகள் சீராக இல்லாத நிலையில் இரு கட்சிகளும் PN கூட்டணியின் உறுப்புக் கட்சிகளாகவே நீடிக்கின்றன.
நெகிரி செம்பிலான் தேர்தல் வரை, பெர்சாத்து கட்சி தாங்கள் இன்னும் PN கூட்டணியின் ஒரு பகுதியாகவே இருப்பதாகவும், எந்தவோர் உறுப்பினரையும் நீக்குவதற்கு கூட்டணியின் அனைத்து உறுப்புக் கட்சிகளின் ஒருமித்த கருத்து தேவை எனவும் வலியுறுத்தி வந்தது.
இருப்பினும், பெர்சாத்து தலைவர் Tan Sri Muhyiddin Yassin, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து பெர்சாத்து பல கட்சிகளுடன் ஒரு வலுவான புதிய கூட்டணியை உருவாக்கும் எனக் கூறியிருந்தார். Ibrahim Aliயின் PUTRA, பி. ராமசாமியின் ‘உரிமை’ உள்ளிட்டவை Ikatan Prihatin Rakyat புதிய கூட்டணியின் கீழ் இடம் பெறும் என்றும், அடுத்த பொதுத் தேர்தலில் அது போட்டியிடும் என்றும் Muhyiddin குறிப்பிட்டிருந்தார்.



