
புது டெல்லி, மே-12 – போர் நிறுத்த உடன்பாட்டை பாகிஸ்தான் மீண்டும் மீறும் பட்சத்தில், அந்நாடு மோசமான பதிலடியையும் விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்திய ஆயுதப் படையின் இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் அந்த கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கு இணக்கம் காணப்பட்ட பிறகும் பாகிஸ்தான் அதை ஏன் மீறுகிறது என புரியவில்லை; சில நேரங்களில் மேலிடங்களில் எடுக்கப்படும் முடிவுகள் அடிமட்டத்தை தாமதமாகச் சென்றடையும் என்பது உண்மைதான்.
ஆனால் இந்த விஷயத்தில் காரணங்களுக்கு இடமில்லை என்றார் அவர்.
அதே சமயம், போர் நிறுத்தம் என்பதால் இராணுவம் மெத்தனமாக இருந்து விடும் என்ற அர்த்தமில்லை.
எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள முழு விழிப்பு நிலையில் இருக்கிறோம், இருப்போம் என ராஜீவ் காய் சொன்னார்.
அமெரிக்காவின் பஞ்சாயத்து போர் நிறுத்தத்திற்கு வழி வகுத்த நிலையில், அதனை மீறும் வகையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து அவர் கருத்துரைத்தார்.
இவ்வேளையில், ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7-ஆம் தேதி ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய வான் தாக்குதல்களில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை, ராஜீவ் காய் உறுதிப்படுத்தினார்.
9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து துல்லியமாகத் தாக்கியதில், சில முக்கியப் புள்ளிகளும் பலியாயினர்.
1999-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான IC814 பயணிகள் விமானம் கடத்தப்பட்டது மற்றும் 2019-ல் ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பான Yusuf Azhar, Abdul Malik Rauf, Mudasir Ahmed உள்ளிட்டோரும் அவர்களில் அடங்குவர் என்றார் அவர்.
நேற்று நடைபெற்ற முப்படைத் தளபதிகளின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்விவரங்களை வழங்கினார்