மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக நீண்ட காலத் தேர்வுப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

புத்ராஜெயா, ஜூன்-10-இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ள நரேந்திர மோடிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி, வளம் மற்றும் உலக அரங்கில் நாட்டின் நன்மதிப்பை உயர்த்துவதில் மோடி ஆற்றிய பல ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க பொதுச்சேவைக்கும், அவரது தலைமைத்துவத்திற்கும் இந்த வரலாற்றுச் சாதனை ஒரு சிறந்த சான்றாகும் எனப் அன்வார் புகழ்ந்துள்ளார்.
இந்தியாவுடன் மலேசியா கொண்டுள்ள நீண்டகால மற்றும் நெருக்கமான நட்புறவை மிகவும் உயர்வாக மதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு நாட்டு மக்களுக்கான புதிய பொருளாதார, சமூக வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் மோடி தலைமையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஆவலோடு காத்திருப்பதாக, அன்வார் தனது வாழ்த்துச் செய்தியில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி இந்தியாவின் பிரதமராக முதன் முறையாகப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, இன்றுடன் தொடர்ந்து 4,399 நாட்களை நிறைவுச் செய்துள்ளார்.
இதன் மூலம், இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் தேர்தல் காலப் பதவிக் கால சாதனையை அவர் முறியடித்துள்ளார்.



