
சிபு, செப்-10-மலேசியா பாஸ்டரல் மாநாடு 2026 (MPC2026), “Celebrate, Listen, Walk Together” என்ற கருப்பொருளில் சிபுவில் நடைபெறுகிறது. 1963 ஆம் ஆண்டு மலேசியா உருவான பின்னர் நடைபெறும் பெரிய அளவிலான முதலாவது தேசிய கத்தோலிக்க ஒன்றுகூடலாக இது முக்கியத்துவம் பெறுகிறது. தீபகற்பம், சபா, சரவாக்கில் ஆகியவற்றின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 850 பேர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் உரையாற்றிய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் Dato Sri Aaron Ago Dagang, கிறிஸ்தவத்தின் “அண்டை அயலாரை நம்மைப் போல் நேசித்தல்” என்ற போதனை சமூக ஒற்றுமைக்கும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார். கல்வி, சுகாதாரம், சமூக நலன் மற்றும் தொண்டு உள்ளிட்ட துறைகளில் கத்தோலிக்க சமூகத்தின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். மலேசியாவின் பன்முகத்தன்மையை “சாலட் கிண்ணம்” என வர்ணித்த அவர், ஒவ்வொரு சமூகமும் தனது தனித்துவத்தைப் பேணியபடியே ஒன்றுபட்ட நாட்டை உருவாக்க முடியும் என்றார்.
இனப் பாகுபாடு, தவறான தகவல்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளி ஆகியவை ஒற்றுமைக்கு சவால்களாக இருக்கின்றன. சகிப்புத்தன்மையைத் தாண்டி புரிந்துணர்வு, மரியாதை, நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்றும் ஏழைகள், குடும்பங்கள், பேரிடர் பாதிப்புகள் மற்றும் இளைஞர்களுக்கான பணிகளில் மத சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மலேசியாவில் ஒற்றுமையை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் கூட்டு பொறுப்பாகும். “நமது முன்னோர்கள் நமக்கு மலேசியாவை வழங்கினர்; அதை மேலும் வலுப்படுத்துவது நமது பொறுப்பு” எனக் குறிப்பிட்ட Aaron Ago Dagang, மாநாட்டின் முக்கிய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு, வலுவான சமூகத்தையும் மேலும் ஒன்றுபட்ட மலேசியாவையும் உருவாக்க பங்களிக்க வேண்டும் என வாழ்த்தினார்.



