
ஜோகூர் பாரு, மே-21-ஜோகூர் அரண்மனை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை அவமதிக்கும் போலி TikTok கணக்குக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், அந்த போலிக் கணக்கில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாமன்னரை தவறாக சித்தரிக்கும் வீடியோக்கள் மற்றும் அவதூறு பதிவுகள் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, “Sultan Ibrahim Ismail” என்ற பெயரைக் கொண்ட அந்தப் போலி கணக்கு, மாமன்னரின் புகைப்படங்களைப் பதிவிட்டு, அவர் “பன்றி இறைச்சி சாப்பிடுவதை விரும்புகிறார்” என்ற முற்றிலும் பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளைப் பரப்பியுள்ளதாக அரண்மனை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது, அரச குடும்பத்தையும் நாட்டின் மரியாதையையும் இழிவுபடுத்தும் செயல் என ஜோகூர் அரண்மனை கடுமையாக கண்டித்துள்ளது.
மேலும், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரண்மனை வலியுறுத்தியது.
சமூக வலைத்தளங்களில் போலிக் கணக்குகள் மற்றும் AI deepfake வீடியோக்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் உண்மைத்தன்மையை சரிபார்த்து மட்டுமே தகவல்களை பகிர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



