
ரெம்பாவ், ஜூலை-5-நெகிரி செம்பிலான், ரெம்பாவில், போலீஸாரின் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற நபர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்று, விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
NSE நெடுஞ்சாலையில், போலீஸாரின் வழக்கமான வாகனச் சோதனையின் போது ஒரு Volkswagen கார் நிறுத்தச் சொல்லப்பட்டது.
ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளார்.
காரை ஆய்வு செய்ததில் அதன் சாலை வரி மற்றும் காப்பீடு காலாவதியானது தெரியவந்தது.
போலீஸார் அவரைப் பின்தொடர்ந்தபோது, அந்த நபர் முன்னுக்குப் பின் வாகனங்களை ஓட்டி, ஆபத்தான முறையில் எதிர் திசையில் சென்று, Proton Saga மற்றும் Toyota Yaris கார்கள் மீது மோதினார்.
விபத்துக்குப் பின், காரை அங்கேயே விட்டுவிட்டு, அருகில் இருந்த செம்பனைத் தோட்டத்திற்குள் அந்த நபர் தப்பியோடி விட்டார்.
காரிலிருந்த பணப்பையை வைத்து, அவர் சிலாங்கூரைச் சேர்ந்த 30 வயது நபர் என்றும், அவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும், அவர் மீது ஏற்கனவே பல குற்றவியல் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது போலீஸாரின் K9 மோப்ப நாய் படை மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் தலைமறைவான நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொது மக்கள் உடனடியாகத் தெரிவிக்குமாறு போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.



