
லக்னோ, ஜூன்-3 – இந்தியாவில் வடமேற்கு லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் பயிற்சி மையம் (coaching centre) இயங்கி வந்த கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது 15 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். சில மாணவர்கள் முதல் தளத்திலிருந்து கீழே குதித்தனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், 24 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்; அவர்களில் 15 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
லக்னோ மேம்பாட்டுக் குழுமத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் மின்சாரம் மற்றும் தீயணைப்புத் துறைகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் நான்கு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து விசாரிக்க இருவர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு நால்வரை கைது செய்தனர்.
வணிகப் பகுதியில் அமைந்துள்ள இக்கட்டிடத்தில், பயிற்சி மையம் மட்டுமின்றி, விளையாட்டு மையம், செல்லப்பிராணிகளுக்கான உபகரணங்கள் விற்கும் கடை, செல்லப்பிராணிகளுக்கான மருத்துவமனை உட்பட பிற கடைகளும் உள்ளன.
முதல் தளத்தில் இருந்த பயிற்சி மையத்திலிருந்து பலர் கீழே குதித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்; தப்ப முயன்றபோது ஒருவர் கீழே விழுவதைக் காட்டும் காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 14 சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த நால்வர் கே.ஜி.எம்.சி (KGMC) அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் விசாரணை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என்று பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட பின்னர் உத்தர பிரதேச துணை முதலமைச்சர் பதக் ( Pathak ) கூறினார்.



