
புத்ராஜெயா, ஏப்ரல்-22-அரசு ஊழியர்களுக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ‘வீட்டில் இருந்து வேலை செய்யும்’ (WFH) புதிய கொள்கை, எரிபொருள் பயன்பாட்டில் குறிப்பிட்ட அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 15 முதல் அமுலுக்கு வந்த இந்தத் திட்டத்தின் மூலம், நேற்று வரை சுமார் 334,000 லிட்டர் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளதாக, ஒற்றுமை அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்த எரிபொருள் சேமிப்பின் மொத்த மதிப்பு சுமார் 678,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.
அடுத்து தனியார் துறையில் ‘வீட்டிலிருந்து வேலை செய்யும்’ திட்டத்தின் தாக்கம் குறித்தத் தரவுகளைத் திரட்ட, அரசாங்கத் தலைமைச் செயலாளர் பணிக்கப்பட்டிருப்பதாக, தொடர்புத் துறை அமைச்சருமான ஃபாஹ்மி சொன்னார்.
இந்த WFH திட்டம் மூலம் லிட்டராகவும், ரிங்கிட்டாகவும் எவ்வளவு மிச்சப்படுத்தலாம் என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள விரும்புவதாக அவர் சொன்னார்.
அனைத்துலக அளவில் நிலவி வரும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க ஏதுவாக, ஏப்ரல் 15 முதல் சுமார் 150,000 அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.



