பெங்களூரு, பிப்ரவரி 26 – தென்னிந்திய மாநிலம் பெங்களூருவில் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட மூதாட்டியின் உடல் தோம்பில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
70 வயது அம்மாதுவின் வெட்டப்பட்ட சில உடல் பாகங்கள், ஞாயிற்றுக் கிழமை மாலை காலியான வீட்டொன்றின் அருகேயும் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் கூறினர்.
‘KR Puram’ எனும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் அம்மூதாட்டி தனது பெண் பிள்ளையுடன் வசித்து வந்தார்; அவரின் உறவினர்கள் சிலரும் அருகாமையில் தான் உள்ளனர்.
இந்த நிலையில் அவரின் சடலம் அப்படியொரு நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதி வாழ் மக்களிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டியின் கைக் கால்களை வெட்டிய கொலையாளி அவற்றை வேறு இடங்களில் வீசி விட்டு, உடலை தோம்புக்குள் போட்டு காலி வீட்டொன்றின் பக்கமாக வீசியிருக்கிறான்.
தோம்புக்குள் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்த கிராம மக்கள் பெங்களூரு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக விசாரணையைத் தொடங்கிய போலீஸ், கொலையாளிக்கு எதிராக தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.
கொலையாளி விரைவிலேயே பிடிபடுவான் என பெங்களூரு போலீஸ் தலைவர் சொன்னார்.