
கோலாலம்பூர், ஏப்ரல்-22-Bestinet Sdn Bhd விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் அரசியல் செயலாளர் Aizuddin Abd Ghafal, சில பி.கே.ஆர் தலைவர்களின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறையான FWCMS ஒப்பந்தம் 2024-ல் புதுப்பிக்கப்பட்டபோது, டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் இருவரும் அமைச்சரவையில் இருந்தனர்.
“2031 வரை நீட்டிக்கப்பட்ட அவ்வொப்பந்தத்தில், ரஃபிசியும் நிக் நஸ்மியும் கூறுவது போல் கடுமையான பலவீனங்களும் குறையும் இருப்பின், அப்போதே ஏன் அவர்கள் வாய்த் திறக்கவில்லை?”
அப்போது வாய் மூடி மௌவுனமாக இருந்துவிட்டு, இப்போது ஏன் திடீரென Bestinet நிறுவனத்திற்கு எதிராகப் பேசுகிறார்கள் என அவர் Aizuddin வினவினார்.
அமைச்சரவையிலிருந்து விலகி விட்டப் பிறகு, இந்த விவகாரத்தை இப்போது கிளப்புவது அரசியல் நேர்மையற்ற செயல் என Aizuddin விமர்சித்துள்ளார்.
FWCMS முறைக்கு மாற்றாக, ‘Turap’ என்றப் பெயரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஆட்சேர்ப்புக்கான புதியத் தளத்தை உருவாக்கும் பொறுப்பை Bestinet நிறுவனத்திற்கே வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக முன்னதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
எனினும், எதுவும் இறுதிச் செய்யப்படவில்லை என மனிதவள அமைச்சர் ரமணன் தெளிவுப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், ரஃபிஸி, நிக் நஸ்மியோடு சேர்த்து மேலும் 8 பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், Bestinet-டுக்கு இன்னொரு குத்தகை வழங்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்புதியத் தளத்தை முறையாக உருவாக்கும் ஆற்றல் அந்நிறுவனத்திற்கு இல்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்; ஆனால் அந்நிறுவனம் அதனை மறுத்தது.
இந்நிலையில் தான், ரஃபிசி மற்றும் அவரின் ஆதரவாளர்களின் நிலைப்பாடு குறித்து Aizuddin கேள்வி எழுப்பியுள்ளார்.



