![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-04-Mar-2024-02-22-PM-4999.jpg)
ஜொகூர் பாரு, மார்ச்-4, ‘அரசாங்க வரி’ என்ற பெயரில் நண்பர் நடத்திய மோசடியில் ஜொகூர் பாருவைச் சேர்ந்த ஆடவர், 4 லட்சம் ரிங்கிட் சேமிப்புப் பணத்தைப் பறிகொடுத்துள்ளார்.
45 வயது அவ்வாடவர், 2021-ஆம் ஆண்டு நவம்பர் வாக்கில் மற்றொரு நண்பரால் 30 வயது ஆடவருடன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
அப்புதிய நண்பர் வெளிநாட்டில் இருந்து தனது வங்கிக் கணக்கில் 25 மில்லியன் ரிங்கிட் பணம் போடப்பட்டிருப்பதாகவும், அவ்வளவுப் பெரியத் தொகையை வங்கியில் இருந்து எடுக்க வேண்டுமென்றால், ‘அரசாங்க வரி’யாக குறிப்பிட்டப் பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அந்த ‘அரசாங்க வரியை’ செலுத்த தமக்கு பணம் கொடுத்து உதவினால், திருப்பித் தரும் போது, கமிஷன் தொகையாக மட்டுமே 6 மில்லியன் ரிங்கிட்டைத் தருவதாக அவர் உறுதியளித்திருக்கிறார்.
இல்லாத அந்த 25 மில்லியன் ரிங்கிட் தன் வங்கிக் கணக்கில் இருப்பதை ‘நிரூபிக்கும்’ விதமாக, சில ஆவணங்களையும் அவர் நீட்டியுள்ளார்.
அதை நம்பிய 45 வயது அந்நபர், டிசம்பர் 2021 முதல் ஜூன் 2023 இடையிலான காலக்கட்டத்தில் 4 வங்கிக் கணக்குகளில் 98 முறை மொத்தமாக 4 லட்சத்து 27 ஆயிரத்து தொள்ளாயிரத்து 40 ரிங்கிட்டைப் போட்டிருக்கிறார்.
அது போதாதென்று, தொடர்ந்துப் பணம் கேட்டு கடந்தாண்டு ஜூலை வரையிலும் நண்பர் நச்சரித்திருக்கிறார்.
இதனால் தாம் ஏமாற்றப்படுகிறோமோ என்ற சந்தேகம் எழுந்து சுதாகரித்துக் கொண்ட அவ்வாடவர் , நண்பரிடம் தான் கொடுத்த மொத்தப் பணத்தையும் திருப்பிக் கேட்டுள்ளார்.
ஆனால், நண்பரோ பணத்துடன் கம்பி நீட்டி விட்டார்; அவரைத் தொடர்புக் கொள்ளும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், மார்ச் இரண்டாம் தேதி போலீசில் புகார் செய்யப்பட்டதாக தெரிகிறது.
பண மோசடி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் தலைமறைவான நபர் தேடப்படுகிறார்.