
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8-மலேசியாவில் அரசியல் அதிகாரம் எப்போதுமே, பெரும்பான்மையினரான மலாய்க்காரர்களிடமே இருந்து வந்துள்ளது; எனவே, பிற இனத்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறப்படும் கருத்துகள் தவறானவை என முன்னாள் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் சூழல் குறித்துப் பேசிய BERSAMA கட்சியின் தலைவருமான ரஃபிஸி, அரசியலமைப்புச் சட்டமும் மக்கள் தொகை அமைப்பு முறையும் மலாய் சமூகத்தின் அரசியல் பலத்தை என்றுமே பாதுகாப்பாக வைத்திருப்பதாகச் சுட்டிக் காட்டினார்.
அரசியல் இலாபத்திற்காக இன ரீதியான அச்சத்தைப் பரப்பும் முயற்சிகளைக் கண்டித்த அவர், இத்தகைய அச்சுறுத்தல்கள் நாட்டின் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைச் திசைதிருப்பி விடும் என எச்சரித்தார்.
எனவே, இன அரசியல் அடையாளங்களைத் தாண்டி, பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டின் மேம்பாட்டில் அரசியல் தலைவர்களும் பொது மக்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று ரஃபிஸி வலியுறுத்தினார்.
Tanah Melayu குறித்து பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ சனுசி நோர் அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், பொருளாதார முன்னாள் அமைச்சருமான ரஃபிசி கருத்துரைத்தார்.



