![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-16-Feb-2024-01-36-PM-9095.jpg)
புக்கிட் மெர்தாஜாம், பிப்ரவரி 16 – அரிசி மீதான விலைக் கட்டுப்பாடு, அடுத்த வாரம் நடைபெறவுள்ள, NACCOL எனப்படும் தேசிய வாழ்க்கைச் செலவினச் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய விவகாரங்களில் ஒன்றாக இருக்குமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
அரிசி விலை கட்டுப்பாடு போன்ற அவசரமான விஷயங்களை விவாதிக்க ஏதுவாக, முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த அக்கூட்டத்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டியிருந்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அரிசி விலையை மிகவும் குறைவாக நிர்ணயிக்க முடியாது என்றாலும், அதைக் குறைக்க முடியும் என தாம் நம்புவதாக பிரதமர் சொன்னார்.
அரிசி விநியோகம் எங்கிருந்து வருகிறது, அதன் குத்தகையாளர்கள் யார், அவர்கள் எவ்வளவு இலாபம் ஈட்டுகின்றனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றாரவர்.
அதே சமயம், சந்தையில் அரிசி விலை உயரும் என்பதால், கொள்ளை இலாபம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், இடைத்தரகர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.