
புத்ராஜெயா, ஆகஸ்ட்-18- இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய விமானியை நாடு கொண்டு வருவது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் முன், காவல்துறை சில விஷயங்களைச் சரிபார்க்க வேண்டியிருப்பதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
அவ்விவகாரம் குறித்து Bukit Aman போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் Datuk Hussein Omar Khanனிடம் இருந்து அவ்வப்போது தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. அதோடு விசாரணை முதலில் முழுமையாக முடிவடைய வேண்டும். அதன் பின்னரே அடுத்த நடவடிக்கை என்ன என்பதைத் தீர்மானிக்க முடியும். அதோடு மலேசிய விமானி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டின் சட்டங்களுக்கு அவர் உட்பட்டாக வேண்டும் என்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
39 வயதான அந்த மலேசிய விமானி கடந்த ஜூலை 28 ஆம் தேதி ஏறக்குறைய 25 கிலோ எடையும், 45 மில்லியன் ரிங்கிட் மதிப்பும் கொண்ட சுமார் 70,000 ‘எக்ஸ்டஸி’ (ecstasy) மற்றும் ‘மெத்தாம்பேட்டமைன்’ (methamphetamine) மாத்திரைகள் அடங்கிய 15 பொட்டலங்களுடன் பிடிபட்டார். அக்கடத்தல் பணிக்காக அவருக்கு 50,000 ரிங்கிட் தருவதாக உறுதியளிக்கப்பட்டிருந்ததும் இந்தோனேசியக் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது.



