![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-24-Nov-2023-02-07-PM-344.jpg)
கோலாலம்பூர், நவம்பர் 24 – நாட்டிலுள்ள, இளைஞர் அமைப்புகளில், பதவி வகிப்பதற்கான வயது வரம்பு 30-ஆக குறைக்கப்படவுள்ளது.
2026-ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் தேதி தொடங்கி அது அமலுக்கு வருவதாக, இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
தற்சமயம், இளைஞர்களுக்கான வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு இளைஞர் சங்கங்கள் மற்றும் இளைஞர் மேம்பாட்டு சட்டத்திற்கு ஏற்ப, அரசாங்கம் அந்த புதிய வயது வரம்பை நிர்ணயித்துள்ளதாக, ஹன்னா சொன்னார்.
அதன் வாயிலாக, இனி 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இளைஞர் அமைப்புகளில் அங்கம் வகிக்க முடியும். அதோடு, இளைஞர் சங்கத்தின் தலைவராக பதவி வகிக்கும் காலமும் ஆறாண்டுகளில் இருந்து நான்காண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இளைஞர் விளையாட்டு அமைச்சும், MBM – மலேசிய இளைஞர் அமைப்பும் மேற்கொண்ட தொடர்ச்சியான விவாதங்களின் அடிப்படையில், புதிய வயது வரம்பை அமல்படுத்துவதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டதையும் ஹன்னா சுட்டிக் காட்டினார்.
அரசாங்கமும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனால், அந்த மாற்றம் குறித்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனத்தில் கொள்ளுமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.