
ஈப்போ, ஆகஸ்ட்-29,ஈப்போவில் உள்ள பேராக் ம.சீ.ச தலைமையகத்தில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியும் பேராக் மாநிலக் கொடியும் தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய ஊழியர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தேசிய தின ஏற்பாடுகளின் போது கொடிகளை ஏற்றும் பணியில் ஈடுபட்ட மூத்த ஊழியர் ஒருவர் கவனக்குறைவாக இந்தத் தவறைச் செய்ததாகவும், தவறு தெரிந்த உடனேயே கொடிகள் இறக்கப்பட்டு முறையாக மீண்டும் ஏற்றப்பட்டதாகவும் ம.சீ.ச துணைத் தலைவரும் பேராக் ம.சீ.ச தலைவருமான டத்தோ Dr மா ஹாங் சூன் (Dr Mah Hang Soon) தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கு முழுப் பொறுப்பேற்பதாகக் கூறிய ம.சீ.ச, பேராக் சுல்தானிடமும் மலேசிய மக்களிடமும் தனது மனமார்ந்த மன்னிப்பைக் கோரியுள்ளது.
மேலும், தவறிழைத்த ஊழியர் தனது வருத்தத்தைத் தெரிவித்து தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததை கட்சி ஏற்றுக்கொண்டதாகவும், இது தொடர்பான போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் Dr மா தெரிவித்தார்.



