
கோலாலம்பூர், ஏப் 16 – புத்ராஜயா வழித்தட எம்.ஆர்.டி ரயிலில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட ஒரு நபர், துணைப் போலீசாரால் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் செவ்வாயன்று இரவு மணி 11.07 க்கு , Kwasa டாமன்சாராவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு ரயிலில் நிகழ்ந்தது.
அந்த நபர் ரயிலில் ஏறுவதற்கு முன் வரிசையில் நின்றபோது சந்தேகத்திற்கிடமானவராகத் தோன்றினார்.
பின்னர் ரயிலுக்குள் தொந்தரவு தரும் விதத்தில் நடந்துகொண்டார் என ( Threads)சில் பயணர் ஒருவர் பதிவிட்டார்.
அந்த நபர் பிளாஸ்டிக் என்று நம்பப்படும் ஒன்றை மென்றுகொண்டிருந்ததாகவும், பயணிகளைத் தீவிரமாக முறைத்துப் பார்த்ததாகவும், ஒரு கட்டத்தில் ரயிலின் தரையில் படுத்துக்கொண்டு, பின்னர் பெட்டியின் நடுவில் இருந்த ஒரு கம்பத்தைக் கடித்ததாகவும் அந்தப் பயனர் கூறினார்.
பல பயணிகள் அந்த ரயிலைத் தவிர்த்துவிட்டு, அடுத்த சேவைக்காகக் காத்திருந்தனர்.இந்தச் சம்பவம் குறித்து பலர் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டனர்.
வேடிக்கை பார்த்தவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியதைக் கண்டித்து, அவசரப் பொத்தானை அழுத்தி அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக் வேண்டுமென நெட்டிசன்களில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு பயனர், அந்த நபர் போதையில் இருந்தாரா அல்லது ஏதேனும் மருத்துவப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பதை அறியாமல் மக்கள் விரைவாகத் முடிவுக்கு வந்தது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனிடையே சம்பந்தப்பட்ட பயணிக்கு துணை போலீஸ் பணியாளர்கள் உதவியதாகவும் அவரை பாதுகாப்பாக ரயிலிருந்து வெளியேற்றி மருத்துவ சிகிச்சைக்காக செலயாங் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதாக பிரசரானா மலேசியா பெர்ஹாட் தெரிவித்தது.



