![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-29-May-2024-09-26-AM-8525.jpg)
கோலாலம்பூர், மே-29, போலிவூட் திரைத்தாரகை ஐஸ்வர்யா ராயின் ஆடை குறித்து தாம் நகைச்சுவையாகக் கூறியது, பெரும் பிரளையத்தை ஏற்படுத்தியது குறித்து பிரபல சமையல் கலைஞர் Chef Wan மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது நகைச்சுவைத் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது; மற்றபடி இந்துக்களைப் புண்படுத்தும் எண்ணம் தமக்கு சிறிதளவும் இல்லை என Instagram பக்கத்தில் அவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
இதுநாள் வரையிலும் அனைத்து மதங்களையும் கலாச்சாரங்களையும் தாம் மதித்து வந்திருப்பதாகக் குறிப்பிட்ட 66 வயது Chef Wan, ஐஸ்வர்யா ராயின் வித்தியாசமான ஆடை குறித்து நெட்டிசன்களின் கருத்தைக் கேட்கும் வகையில் யதார்த்தமாகத் தான் கருத்துப் பதிவேற்றியதாகக் கூறிக் கொண்டார்.
ஐஸ்வர்யா ராய், தனக்குப் பிடித்த நடிகைகளில் ஒருவர் என்பதால் அவரின் வித்தியாசமான ஆடையால் ஈர்க்கப்பட்டு தான் அப்படியொரு பதிவைப் போட்டதாகவும், அதற்காக அவரிடமும் மன்னிப்புக் கோருவதாக Chef Wan சொன்னார்.
போலீஸ் விசாரணைக்கு அழைக்கும் அளவுக்கு அது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டு புகார் வரை செல்லும் என நினைக்கவில்லை என்றார் அவர்.
இனவாதப் போக்கில் ஐஸ்வர்யா ராய் குறித்து சமூக ஊடகத்தில் கருத்துப் பதிவேற்றம் செய்தமைக்காக Chef Wan விசாரிக்கப்படுவதை புக்கிட் அமான் போலீசும் முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தது.
Cannes திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஆடையை பத்துமலைத் தைப்பூச காவடியுடன் Chef Wan இணைத்துப் பேசியதற்கு, ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் உள்ளிட்ட தரப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.