புத்ராஜெயா, மார்ச் 6 – சரவாக், கூங்கிலுள்ள, மெர்டேக்கா தங்கும் விடுதி மற்றும் “சூட்களை”, 30 லட்சம் ரிங்கிட்டில் கையகப்படுத்தியது தொடர்பான ஒன்பது ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து, டான் ஸ்ரீ முஹமட் இசா அப்துல் சாமாட் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன் வாயிலாக, 2021-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் இசாவிற்கு விதித்த தண்டனையை, மூவர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு, இன்று தள்ளுபடி செய்தது.
இசா செய்த மேல்முறையீட்டில் அடிப்படை உள்ளது. அதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் ஒருமனதாக அறிவித்தனர்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரான, 75 வயது இசா சாமாட்டுக்கு எதிரான ஒன்பது ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு, பிப்ரவரி மூன்றாம் தேதி, அவருக்கு ஆறாண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு கோடியே 54 லட்சம் ரிங்கிட் அபராதமும் விதித்து உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ நஸ்லான் முஹமட் கசாலி தீர்ப்பளித்தார்.
எனினும், அந்த தீர்ப்புக்கு எதிராக இசா சாமாட் மேல்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.