![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-05-Jun-2024-02-49-PM-866.jpg)
குவந்தான், ஜூன் 5 – பஹாங், செமாம்புவிலுள்ள, எண்ணெய் நிலையம் ஒன்றிலிருந்து, ஹோண்டா சிட்டி காருடன் தப்பிச் சென்ற ஆடவன், பெந்தோங்கில் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
அந்த ஆடவனிடமிருந்து, அவன் களவாடிச் சென்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக, குவாந்தான் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் வான் முஹமட் ஜஹாரி வான் பூசு தெரிவித்தார்.
எனினும், அந்த கைது தொடர்பான மேல் விவரம் எதையும் அவர் வெளியிடவில்லை.
முன்னதாக, நேற்று முன்தினம் மாலை மணி 3.10 வாக்கில், 68 வயது மூதாட்டி ஒருவர், தனது 77 வயது கணவர் மற்றும் 38 வயது மகளும், காரின் உரிமையாளரும் ஆன பெண்ணுடன் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிலையத்திற்கு சென்றபோது அச்சம்பவம் நிகழ்ந்தது.
மகள் காரை விட்டு இறங்கி எண்ணெய் நிலையத்தின் பல்நோக்கு கடைக்குள் சென்ற சமயம், அங்கு வந்த ஆடவன் ஒருவன் அக்காரை எடுத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
அவ்வாடவன் காரை எடுத்துச் செல்லும் போது, மூதாட்டி காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த வேளை ; அவரது கணவர் கழிவறைக்கு சென்றிருந்தார்.
எண்ணெய் நிலையத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில், அந்த மூதாட்டியை இறக்கி விட்டு அவ்வாடவன் காரை களவாடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.