![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-24-at-10.24.06-AM.jpeg)
பெய்ஜிங், ஏப்ரல் 24 – சீனாவில், பிரசவம் முடிந்து வீடு திரும்பும் மருமகளைத் தூக்கி வர, ஒரு crane-னையே வாடகைக்கு எடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் அவரின் மாமியார்.
அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையைப் பிரசவித்திருப்பதால், 7 மாடிப் படிகளில் ஏறுவதற்கு மருமகள் சிரமப்படலாம் எனக் கருதி, Wang எனும் மாமியார் அவ்வாறு செய்திருக்கிறார்.
இணையத்தில் வைரலாகியுள்ள காணொலியில், crane பணியாளர் துணைக்கு வர, அந்த இளம் தாய் crane-னில் ஏற்றப்பட்டு, ஏழாவது மாடியின் பால்கனியில் இறக்கி விடப்படுகிறார்.
மருமகளை தனது சொந்த மகள் போல் பாவிப்பதாகக் கூறிய Wang, பேரக்குழந்தை வந்து விட்டதால் தாம் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருப்பதாகக் கூறினார்.
எனவே, crane-னை வைத்து மருமகளை வீட்டுக்குக் கொண்டு வந்ததெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என மிகவும் அடக்கத்துடன் மாமியார் Wang கூறுகிறார்.
இனி எப்போதும் மருமகள் இடத்தில் மகிழ்ச்சியை மட்டுமே நான் பார்க்க விரும்புகிறேன்; அவள் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதையும் உறுதிச் செய்வேன்; அதை விட எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாசத்தையும் கொட்டுவேன் என Wang கூறி நெட்டிசன்களைப் புல்லரிக்க வைக்கிறார்.
காணொலியைப் பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் மருமகளை crane-னில் தூக்கி விட்டீர்கள், ஆனால் உங்கள் மருமகள், உங்களைத் தூக்கி அவரின் இதயத்தின் உச்சத்தில் வைத்திருப்பார் என சிலாக்கின்றனர்.
இவ்வேளையில், தனது 15 ஆண்டு கால அனுபவத்தில், பிரசவம் முடிந்து திரும்பும் பெண்ணை crane-னில் வைத்து ஏற்றி அழைத்து வந்தது இதுவே முதன் முறை என, அந்த crane நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார்.