![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-01-Apr-2024-02-16-PM-8160.jpg)
புத்ரா ஜெயா, ஏப்ரல்-1, சுங்கத் துறை அதிகாரிகள் 34 பேர் மாபெரும் கடத்தல் மோசடியில் ஈடுபட்டிருப்பது குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருத்தமும் பெருத்த ஏமாற்றமும் தெரிவித்துள்ளார்.
சுங்கத் துறையின் சிறிய பிரிவை மட்டுமே அது உட்படுத்தியிருந்தாலும், அவர்கள் புரிந்த ஊழலின் அளவு மிகப்பெரியது; அரசாங்கத்துக்கு 200 கோடி ரிங்கிட் இழப்பை அவர்கள் தேடித் தந்துள்ளார்கள் என பிரதமர் கூறினார்.
எனினும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC தமக்களித்த விளக்கத்தின் படி, அரசுத் துறையின் மூத்த அதிகாரிகள் எவரும் ஊழல் அல்லது அதிகார முறைகேட்டில் ஈடுபட்டதாக இதுவரை புகார் ஏதும் இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றார் அவர்.
ஆனால், சுங்கத் துறையில் உள்ள ஒரு சிலர் லஞ்சம் வாங்கிக் கொண்டு இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது வருத்தமளிப்பதாக, பிரதமர் துறையின் இன்றைய மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய போது டத்தோர் ஸ்ரீ அன்வார் கூறினார்.
நாட்டுக்குள் மதுபானங்கள், சிகரெட், மெல்லும் புகையிலை, சுகாதார பராமரிப்புப் பொருட்கள், வாகன உபரிப் பாகங்கள் போன்றவற்றை வரி செலுத்தாமல் கடத்திக் கொண்டு வரும் கும்பல்களுக்கு உடந்தையாக இருந்ததன் பேரில், சுங்கத் துறையின் அந்த 34 அதிகாரிகளும் பணியாளர்களுக்கும் முன்னதாகக் கைதுச் செய்யப்பட்டனர்.
கடத்தல் கும்பல்களின் வேலையைக் கண்டுக் கொள்ளாமல் இருப்பதற்காக அவற்றிடம் இருந்து 47 லட்சம் பணத்தை அவர்கள் லஞ்சமாகப் பெற்றிருப்பதும் அம்பலமாகியுள்ளது.