
புத்ராஜெயா, ஜூன் 30 – முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் தொடர்பான ஆர்மடா நிதி வழக்கில் அரசுத் தரப்பு தாக்கல் செய்த இறுதி மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை, கூட்டரசு நீதிமன்றம் ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை வகித்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் டத்தோ ஸ்ரீ அபு பக்கார் ஜாயிஸ், அமர்வில் இடம்பெற்ற மற்றொரு நீதிபதி தற்போது உடல்நலக் குறைவால் விடுப்பில் இருப்பதால் இன்று தீர்ப்பை வழங்குவது பொருத்தமல்ல என்று தெரிவித்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு, சைட் சாடிக் மீது முன்பு சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் அவர் விடுவிக்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை நிலைநிறுத்துமா அல்லது அரசுத் தரப்பின் மேல்முறையீட்டை ஏற்று உயர் நீதிமன்றத்தின் தண்டனையை மீண்டும் அமல்படுத்துமா என்பதை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, 2025 ஜூன் 25-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் சைட் சாடிக்கை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்திருந்தது. அதனை எதிர்த்து அரசுத் தரப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் இறுதி மேல்முறையீடு செய்தது.



