
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – மலேசிய தேசிய விமானப் பணியாளர்கள் சங்கமான Nufam, விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு ஒன்றரை முதல் 2 மணி நேரத்துக்கு முன்பாக வந்து போதைப்பொருள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங்கின் (Tiong King Sing) பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேபின் பணியாளர்கள் ஏற்கனவே நீண்ட நேரப் பணி, வேலை நேரம் மற்றும் போதிய தூக்கமின்மை காரணமாக சோர்வடைந்துள்ள நிலையில், கூடுதல் நேரம் முன்கூட்டியே பணிக்கு வரச் செய்வது அவர்களின் கவனம், முடிவெடுக்கும் திறன் மற்றும் அவசரநிலைகளில் செயல்படும் திறனை பாதிக்கக்கூடும் என Nufam தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் விமானி ஒருவர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தியோங் இந்த பரிந்துரையை முன்வைத்தார்.
எனினும், தனிநபர்களின் செயல்களுக்காக ஒட்டுமொத்த விமானப் பணியாளர்களையும் சுமைக்கு உள்ளாக்கக் கூடாது என்றும், புதிய விதிமுறைகளை முன்மொழியும் முன் சங்கத்துடன் அமைச்சு கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் Nufam வலியுறுத்தியுள்ளது.



