![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-22-Mar-2024-10-38-AM-6399.jpg)
ஜொகூர் பாரு, மார்ச்-22, Op Delta Bersepadu சோதனையில் பல்வேறு குற்றங்களுக்காக 23 வெளிநாட்டவர்கள் உட்பட 219 பேர் ஜொகூரில் கைதாகியுள்ளனர்.
இஸ்கண்டார் மேம்பாட்டு பிரதேசம் மற்றும் கூலாயில் மார்ச் 5 முதல் கடந்த செவ்வாய்க்கிழமை வரை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில் அவர்கள் கைதுச் செய்யப்பட்டதாக ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார் சொன்னார்.
அச்சோதனை, கார் பட்டறைகள், பழைய சாமான்களை வாங்கும் விற்கும் கடைகள், அடக்குக்கடைகள், கார் உபரி பாகங்கள் விற்கும் கடைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும் கடைகளைக் குறி வைத்து மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.
முன்னாள் குற்றவாளிகள், தேடப்படும் நபர்கள், அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் ஆகியோரையும் அச்சோதனை குறி வைத்ததாக குமார் சொன்னார்.
கைதானவர்களில் 207 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள்; 22 முதல் 59 வயது வரையிலான அவர்களை விசாரணைக்குத் தடுத்து வைக்க நீதிமன்ற ஆணைப் பெறப்படும் என்றும் குமார் கூறினார்.
மாநில வாழ் மக்களுக்கும் வெளியில் இருந்து வருவோருக்கும் ஜொகூர் பாதுகாப்பான இடமாக இருப்பது உறுதிச் செய்யப்படும்.
ஆக, இதுபோன்ற குற்றச்செயல் தடுப்பு நடவடிக்கைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என கமிஷ்னர் குமார் கூறினார்.