
ஜோகூர் பாரு, ஜூன்-8-ஜோகூர் மாநிலத் தேர்தல் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவதை நிறுத்திவிட்டு, பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர்களின் வெற்றிக்காகக் களத்தில் கடுமையாக உழைக்குமாறு ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்கண்டார் புத்ரி, Educity உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பாரிசான் தேர்தல் இயந்திரத் தொடக்க விழாவில் பேசிய அவர், ஜோகூர் சட்டமன்றத்தைக் கலைப்பது என்ற முடிவு, மாநில மற்றும் மத்திய BN தலைமைகளுக்கு இடையே ஒருமனதாக எடுக்கப்பட்ட ஒரு சரியான நடவடிக்கை என்றார்.
முடிவு எடுக்கப்பட்டுவிட்டதால், இனி அதுகுறித்து விவாதிப்பதில் அர்த்தமில்லை என்றும், தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு போன்ற விவகாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிச் செய்வதே தற்போதைய முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
BN தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, ம.சீ.ச தலைவர் டத்தோ ஸ்ரீ Dr வீ கா சியோங் மற்றும் ஜோகூர் BN தலைவரும் மந்திரி பெசாருமான டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி ஆகியோரின் முன்னிலையில் விக்னேஸ்வரன் அவ்வாறு பேசினார்.
ஜூன் 1-ல் ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, அங்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது.
56 தொகுதிகளிலும் பாரிசான் தனித்து களமிறங்கும் நிலையில், அவற்றில் 4 இடங்களில் ம.இ.கா போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



