
கோலாலம்பூர், மே-12-தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த வெற்றி தற்கால அரசியலில் ஒரு ‘வலிமையான மாற்றம்’ என அவர் வர்ணித்துள்ளார்.
விஜய்யின் இந்த எழுச்சி, ஆட்சி மற்றும் அதிகாரத்தை வடிவமைப்பதில் இளைய தலைமுறையினரின் விருப்பங்களையும் ஆற்றலையும் பிரதிபலிக்கிறது.
மக்களின் இந்த மிகப்பெரிய ஆதரவு வெறும் அரசியல் வெற்றி மட்டுமல்ல, இது பொறுப்புணர்வு மற்றும் மாற்றத்தை விரும்பும் இளைஞர் சக்தியின் ஒரு முக்கியச் செய்தி என்றும் அவர் கூறினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், வட்டாரத்தில் உள்ள பல இளைஞர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளவும், தேசக் கட்டமைப்பில் ஈடுபடவும் தூண்டுதலாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விஜய்யின் தலைமையில் தமிழ்நாடு உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக நீதியை நோக்கி முன்னேறும் என்றும், இதன் மூலம் மலேசியா மற்றும் தமிழக மக்களுக்கு இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



