
கோலாலம்பூர், ஆகஸ்ட்-20-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தைவான் விவகாரம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள், வட்டார அளவில் மாறுபட்ட தூதரக எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன.
பிரபல Al Jazeera செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில், தைவானைச் சீனாவின் ஒரு பகுதியாகவே மலேசியா கருதுகிறது என்றும், நாடு ‘ஒரே சீனா’ கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது என்றும் அன்வார் உறுதிப்படுத்தினார்.
சீன வெளியுறவு அமைச்சு இக்கருத்துகளுக்கு உடனடி வரவேற்பு அளித்துள்ளதுடன், தைவான் என்றுமே சீனாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதை மீண்டும் சுட்டிக்காட்டியது.
அதேசமயம், தைவானிய வெளியுறவு அமைச்சோ இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய கருத்துகள் இருதரப்பு அரசியல் நம்பிக்கையைப் பாதிப்பதுடன், மலேசியாவிலுள்ள தைவானிய வணிக முதலீடுகளைப் பாதிக்கக்கூடும் எனவும் தைப்பே எச்சரித்துள்ளது.
மலேசியாவைப் பொருத்தவரை, சீனாவைத் தனது முதன்மை வர்த்தகக் கூட்டாளியாகப் பேணும் அதே வேளையில், தைவானுடனான பொருளாதார, தொழில்நுட்ப உறவுகளையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் சமநிலையான தூதரக அணுகுமுறையை கையாள்வது குறிப்பிடத்தக்கது.



