பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் மலேசியர்களுக்கு பரிசாக வெளிநாட்டுக் கார்கள்
![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-01-Mar-2024-08-45-AM-118.jpg)
கோலாலம்புர், மார்ச் 1 – 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் மலேசியர்களுக்கு வெளிநாட்டு கார்கள் பரிசாகத் காத்திருக்கின்றன.
இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ அந்த அதிரடி அறிவிப்பைச் செய்துள்ளார்.
உலகின் அந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில் பதக்கம் வெல்லும் தேசிய வீரர்களுக்கு அக்கார்களைப் பரிசாக வழங்க, பிரபல வெளிநாட்டு கார் நிறுவனமொன்று முன் வந்திருப்பதாக அவர் சொன்னார்.
உலக அரங்கில் நாட்டின் பெயரை நிலைநாட்ட போராடவிருக்கும் வீரர் – வீராங்கனைகளுக்கு அதுவொரு மிகப் பெரிய உந்துச் சக்தியாக இருக்கும் என அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அரசாங்க தொடர்புடைய நிறுவனங்கள் GLC உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களும் அது போன்ற சன்மானங்களை வழங்கி தேசிய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என ஹானா கேட்டுக் கொண்டார்.
நடப்பில், SHAKAM எனப்படும் விளையாட்டு வெற்றிகளுக்கான வெகுமதித் திட்டத்தின் கீழ் ஒலிம்பிக் – பாராலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியாளர்களுக்கு 10 லட்சம் ரிங்கிட்டும், வெள்ளிப் பதக்கத்தை வெல்வோருக்கு 3 லட்சம் ரிங்கிட்டும், வெண்கலத்தோடு நாடு திரும்புவோருக்கு 1 லட்சம் ரிங்கிட்டும் பரிசுப் பணமாக வழங்கப்பட்டு வருகிறது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸ் தலைநகரில் நடைபெறவிருக்கிறது.
மலேசியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கக் கனவை நனவாக்கும் முயற்சியில் தங்கத்தை நோக்கியப் பயணம் (Road To Gold ) திட்டம் உருவாக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டிக்கான தேசிய அணி தீவிர உயர்தரப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.