![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-26-Apr-2024-05-35-PM-1524.jpg)
தோக்கியோ, ஏப்ரல் 26 – ஜப்பான், புஜிகாவாகுச்சிகோ நகரத்திலிருந்து, அந்நாட்டின் உயரமான பிரசித்தி பெற்ற எழில் மிகுந்த புஜி மலையை சுற்றுப் பயணிகள் எளிதாக கண்டு இரசிக்கலாம்.
அதனால், புகைப்படங்களை எடுத்துக் கொள்ள அங்கு ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான அந்நிய சுற்றுப் பயணிகள் படையெடுப்பது வாடிக்கையாகியுள்ளது.
அவ்வாறு அங்கு படையெடுக்கும் சுற்றுப் பயணிகள், உள்ளூர் மக்களின் பாரம்பரியத்க்திற்கும், சட்ட திட்டங்களுக்கும் மதிப்பளிப்பதில்லை.
கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதோடு, வெறுமனே குப்பைகளை வீசியெறிவதால், புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான புஜிகாவாகுச்சிகோ தனது அழகை இழந்து அசுத்தமாக காட்சி அளிப்பது, உள்ளூர் மக்களையும், அதிகாரிகளையும் சினமடையச் செய்துள்ளது.
குறிப்பாக, அங்கு செல்லும் அந்நிய சுற்றுப் பயணிகள், புகைப்படங்களை எடுக்க, அனுமதியின்றி வீடுகள் அல்லது கட்டடங்கள் மீது ஏறி தொந்தரவு தருகின்றனர்.
அதனை கருத்தில் கொண்டு, புஜிகாவாகுச்சிகோ நகரின் முக்கிய புகைப்படத் தளத்திலிருந்து, புஜி மலையின் காட்சியை மறைக்கும் வகையில், 2.5 மீட்டர் உயரத்தில், கருப்பு அரண் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
அந்த தடுப்பு அரணின் கட்டுமானப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிக்காத அந்நிய சுற்றுப் பயணிகளுக்கு அது ஒரு சிறந்த பாடமாக அமையுமெனவும் கூறப்படுகிறது.