![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/192886.jpg)
கோலாலம்பூர், மார்ச் 9 – பொதுச் சேவைத் துறை பெண் ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான (flexible) வேலை நேரத்தை அறிமுகப்படுத்தும் பரிந்துரை ஆராயப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.
குடும்பத்திற்கு கூடுதல் நேரம் செலவிட ஏதுவாக அவர்களின் வேலை நேரத்தைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பொதுச் சேவைத் துறை ஊதிய முறை SSPA மீதான ஆய்வின் ஒரு பகுதியாக அது பரிசீலிக்கப்படும்; அந்தத் தளர்வு, சற்றுக் குறைவான சம்பளத்தில் வழங்கப்படலாம் என்றார் அவர்.
வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்யும் அரசு ஊழியர்கள், அந்த உத்தேச தளர்வு மூலம் நாளொன்றுக்கு 4 மணிக்கு நேரங்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டி வரலாம்; எனினும், அதற்கேற்ற குறைந்த ஊதியத்தோடு என டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.
வீட்டில் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ள பெண்களுக்கு இது நன்மைப் பயக்கும் என்றார் அவர்.
பெண்களின் சேவையை அதிகரிக்க, SOP நடைமுறைகளில் சிறிய மாற்றம் செய்வதில் தவறில்லை என்றார் அவர்.
குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டி, வேலையை விடும் பெண்களும் இருக்கவே செய்வதால், கால மாற்றத்திற்கு ஏற்ப சிந்தனை மற்றும் செயல் மாற்றமும் அவசியம்.
பெண் அரசு ஊழியர்களுக்கு இந்த flexible வேலை நேரம் மட்டும் சாத்தியமானால், உலகில் அதனை அமுல்படுத்திய முதல் நாடு என்ற பெருமையை மலேசியா பெறும் என பிரதமர் கூறினார்.