![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/nestle.jpg)
நியூ டெல்லி, ஏப்ரல் 18 – இந்தியாவில் குழந்தைகளுக்கான பிரபல உணவு பொருள்களைத் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்தின் கீழ் வெளியிடப்படும் செர்லாக்கில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுவது, அண்மையில் Public Eye நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பெரிய அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நெஸ்லே நிறுவனம், இந்தியாவில் அது விற்பனை செய்யும் அனைத்து 15 Cerelac குழந்தை தயாரிப்புகளிலும், ஒரு பரிமாறுதலுக்கு சராசரியாக 3 கிராம் சர்க்கரை கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நெஸ்லே தனது தயாரிப்புகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை சிறந்த படங்களைப் பயன்படுத்தி சிறப்பித்துக் காட்டினாலும், சர்க்கரை தொடர்பான விவகாரத்தில் அது வெளிப்படையானது இல்லை என Public Eye அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் இதே தயாரிப்புகள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் சர்க்கரையே சேர்க்கப்படாமல் விற்கப்படுகிறது.
அதிகப்படியான சர்க்கரை குழந்தைகள் மத்தியில் ஒருவித போதையை ஊக்குவிக்குமென்றும், அதிக அளவில் சர்க்கரை பொருட்களை உட்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் தூண்டிவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், நெஸ்லே நிறுவனம் இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டில் 20,000 கோடி ரூபாய், மதிப்பிலான செர்லாக் தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.