
கோத்தா திங்கி, ஆகஸ்ட்.07- ஜோகூர், கோத்தா திங்கியில் Taman Sri Saujana எனுமிடத்தில் மாணவி ஒருவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் கடத்தல் முயற்சி சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ காவல் துறையினர் சந்தேக நபர் ஒருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து நேற்று தாங்கள் புகாரைப் பெற்றதாக Kota Tinggi மாவட்டக் காவல் துறை தலைவர் Superintendan Yusof Othman தெரிவித்தார்.
2017 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்நபர் உயரமான, மெலிந்த மற்றும் கருமையான நிறம் கொண்டவர்.
அச்சம்பவம் அல்லது சந்தேக நபர் குறித்த தகவல் தெரிந்த பொதுமக்கள், 011-26046234 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி Inspector Nurul Zakiyah Daudட்டைத் தொடர்பு கொள்ளுமாறும் Yusof Othman கேட்டுக் கொண்டார்.
Taman Sri Saujanaவில் காலை 6.30 மணி முதல் 6.40 மணிக்குள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த தமது 13 வயது மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பிலான காணொளியை மாது ஒருவர் முன்னதாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.
மின்சார ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த அச்சிறுமியை delivery பெட்டியைப் பொருத்திய மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் பின் தொடர்ந்த காட்சிகள் அக்காணொளியில் இருந்தன.
அந்நபர் தனது அந்தரங்க உறுப்புக் காட்டியதோடு கைப்பேசியில் ஆபாச வீடியோக்களைக் காண்பித்து, பணம் தருவதாகச் சொல்லி அச்சிறுமியின் கையைப் பிடிக்க முயன்றுள்ளார்.
அவரின் அச்செயலால் அச்சமடைந்த அச்சிறுமி, ஸ்கூட்டரை வேகமாக ஓட்டி பள்ளியைச் சென்றடைந்தார். பின்னர் அச்சிறுமி மிகுந்த மன உளைச்சலுடனும் கண்ணீருடனும் சம்பவத்தை ஆசிரியரிடம் விவரித்ததாகக் கூறப்படுகிறது.



