![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-29-May-2024-02-03-PM-7915.jpg)
கோலாலம்பூர், மே 29 – E-hailing ஓட்டுநர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் ஜோகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் மெய்க்காப்பாளரை போலீசார் விசாரணைச் செய்து வருகின்றனர்.
மாற்றுத் திறனாளியான அந்த E-hailing ஓட்டுநர், பிரிக்ஃபீல்ட்சில் உள்ள ஹோட்டலில் பயணிகளுக்காகக் காத்திருந்தபோது அந்த மெய்க்காப்பாளர் தன்னை தாக்கியதாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
46 வயதான அந்த ஓட்டுநரின் தலையில் குத்தி, வாகனத்தை நகர்த்தப் பணித்தாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஓட்டுநர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டம் பிரிவு 323-ன் படி இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் சுஹைய்லி முகமட் சாய்ன் தெரிவித்திருக்கிறார்.