சென்னை, டிச 5 – மிச்சாங் புயலினால் பெய்யும் கனமழைக்கு இடையே நேற்று அதிகாலை சென்னை வேலம்மாள் நியூ ஜெனரல் பள்ளி அருகே ராட்சத முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க தமிழக வனத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே போன்ற முதலையை பிற இடங்களில் பார்த்ததாக பொதுமக்கள் காணொளியின் கீழ் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
கடும் மழையினால், நீர் நிலைகள் நிரம்பியதைத் தொடர்ந்து அம்முதலைகள் தப்பியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட முதலைகள் சுற்றித் திரியலாம் எனவும் நம்பப்படுகிறது
இதனிடையே, கடும் மழையினால், ஒதுங்க இடம் தேடி பாம்பு வீட்டிற்குள் புகும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், விலங்குகளும் கொடூர விஷம் கொண்ட பாம்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இச்சமயத்தில் அவை வெளியேறி ஆங்காங்கே மக்கள் வசிப்பிடங்களை நோக்கி படையெடுக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.